May 22, 2010

மற்றவர்களுக்கு அள்ளியும் தன் மகனுக்கு கிள்ளியும்...

இப்னு உமர்(ரலி) அறிவித்தார்கள்;
(என் தந்தை) உமர் இப்னு கத்தாப்(ரலி) முதன் முதலாக ஹிஜ்ரத் செய்து வந்தவர்களுக்கு (பொதுநிதியிலிருந்து) நான்காண்டுகளுக்கு நான்காயிரம் (திர்ஹம்) தீனார்) கொடுக்க வேண்டுமென நிர்ணயித்தார்கள். (தம் மகனான) எனக்கு மூவாயிரத்து ஐநூறு கொடுக்க வேண்டும் என நிர்ணயித்தார்கள். அவர்களிடம், '(தங்க மகன்) இப்னு உமர் ஹிஜ்ரத் செய்து வந்தவர்களில் ஒருவர் தாமே! நான்காயிரம் கொடுக்காமல் அவருக்கு மட்டும் ஏன் குறைத்து நிர்ணயித்தீர்கள்?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், 'அவரை அழைத்துக் கொண்டு ஹிஜ்ரத் செய்து வந்ததெல்லாம் அவரின் தாய் தந்தையர் தாம்" என்று கூறினார்கள். "அவர் சுயமாக ஹிஜ்ரத் செய்து வந்தவர்களைப் போன்றவரல்லர்" என்றும் உமர்(ரலி) சொல்வார்கள்.

ஆதாரம் புஹாரி;எண் 3912

இந்த செய்தியில் ஆட்சித்தலைவராக இருந்த உமர்[ரலி] அவர்கள், இஸ்லாத்திற்காக நாடு துறந்த தியாகிகளுக்கு உதவித்தொகை நிர்ணயித்தபோது, முஹாஜிரான தமது மகன் அப்துல்லாஹ் இப்னு உமர்[ரலி] அவர்களுக்கு குறைவான தொகையை தீர்மானித்துவிட்டு அது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டபோது, அவர் சுயமாக வந்தவரல்ல. அவரது பெற்றோரே அதாவது நானே அவரை அழைத்து வந்தேன். எனவே மற்ற முஹாஜிருக்கு சமமாக மாட்டார் என்று கூறியதை பார்க்கிறோம். இன்றைய ஆட்சியாளர்களை பார்த்தால் பல்வேறு தகுதியுடையவர்கள் தம்முடன் இருந்தாலும் அவர்களை புறந்தள்ளி, அல்லது அவர்களை விட ஒரு படி உயர்வான அந்தஸ்த்தையும், உதவிகளையும் தன் மகனுக்கு வாரி வழங்குவதோடு தனக்கு பின்னால் தன்னுடைய அரியாசனத்தை ஆக்கிரமிக்க தன் மகனுக்கு அனைத்து வழிவகைகளையும் செய்வதை பார்க்கிறோம். இப்படிப்பட்ட மன நிலை உமர்[ரலி] அவர்களுக்கு வரமால் பாதுகாத்தது இறையச்சம் அல்லவா? அதனால்தான் காந்தி சொன்னார்;
'இந்தியாவில் உமருடைய ஆட்சிபோல் ஆட்சி அமையவேண்டும்' என்றார்.

No comments:

Post a Comment